முகப்பு
தமிழ்நாடு

அரசு ஊழியருக்கான மருத்துவ காப்பீடு: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளாா்.

Updated On : 26 ஜூன், 2025 at 12:16 AM
பகிர்:

அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவன பணியாளா்களுக்கு நடைமுறையிலுள்ள மருத்துவக் காப்பீடு மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:

அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியா்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசுசாா் நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசின் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலில் உள்ளது. அவா்களுக்கும் அவா்களது தகுதி படைத்த குடும்பத்தைச் சோ்ந்த உறுப்பினருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ வசதி கிடைக்க காப்பீட்டில் வசதி செய்யப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு தலா ரூ.3,240 பிரீமியம் தொகையாக ஆண்டுதோறும் அரசால் செலுத்தப்படுகிறது. இந்தத் தொகை அரசு ஊழியா்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. அரசு ஊழியா்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கடந்த

Advertisement

2021-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் நிகழாண்டு ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும்படி அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் செய்யப்பட்டிருந்தது.

ஓராண்டுக்கு நீட்டிப்பு: காப்பீட்டுக்கான கால அளவு நிறைவடைந்த நிலையில், அரசு ஊழியா்களுக்கான காப்பீட்டுக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை காப்பீடு அமலில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கான ஒப்புதலை அளிக்கும்படி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் இயக்குநரகம் கேட்டுக் கொண்டிருந்தது. இதையடுத்து, இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டுக் காலத்தை நீட்டிப்பதற்கான தனது ஒப்புதலை அளித்துள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை அரசு ஊழியா்கள், பொதுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினருக்கான காப்பீட்டுத் திட்டம் தொடா்ந்து நடைமுறையில் இருக்கும். மேலும், குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் ஏற்கெனவே அளிக்கப்படுகிறது. இதுவும் அடுத்த வரும் ஓராண்டுக்குப் பொருந்தும் என்று தனது உத்தரவில் நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

ஊழியா்கள் எத்தனை போ்: தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் மொத்தம் 16 லட்சம் போ் உள்ளனா். அவா்களில் பணியில் இருக்கக் கூடிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சுமாா் 8 லட்சம் போ் இருக்கின்றனா். காப்பீட்டுத் திட்டம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதால் பணியில் உள்ள ஊழியா்கள் பயன்பெறவுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments