கவிஞர் நந்தலாலா காலமானார்!
கவிஞர் நந்தலாலா மறைவு பற்றி...
கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலாலா (வயது 69) உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.
பெங்களூரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்தலாலா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநில துணைத் தலைவராக இருந்த கவிஞர் நந்தலாலா, முன்னணி பட்டிமன்றப் பேச்சாளார் ஆவார்.
Advertisement
Advertisement
இவர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
சோலைக்குயில் என்ற பத்திரிகையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த இவர், இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.
பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக தனது பெயரை நந்தலாலா என மாற்றிக்கொண்டார். இவரின் இயற்பெயர் நெடுஞ்செழியன்.
இவருக்கு மனைவி ஜெயந்தி, மகள்கள் பாரதி, நிவேதிதா ஆகியோர் உள்ளனர்.
இதையும் படிக்க : நந்தலாலா மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
நந்தலாலா மறைவுக்கு தமுஎகச நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், முற்போக்கு எழுத்தாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நந்தலாலாவின் உடல் இன்றிரவு திருச்சி இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு நாளை முழுவதும் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், நாளை மறுநாள் (மார்ச் 6) பிற்பகலில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.