தஞ்சை: ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற மாணவன் பலி!
காளையை அடக்க முயன்ற மாணவன் பலியானது பற்றி...
தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டு காளையை அடக்கினால் ரூ. 200 தருகிறேன் என உரிமையாளர் கூறியதை நம்பி, காளையை அடக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவன் பலியானார்.
தஞ்சாவூர் அடுத்துள்ள வல்லம் சவேரியார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசையாஸ். இவரது மகன் தீரன் பெனெடிக்ட், வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டுச் சென்றுகொண்டிருந்த தீரன், ஒரு பண்ணை அருகே நின்றுகொண்டிருந்த காளையை பிடிக்க முயற்சித்துள்ளார். அப்போது தீரனின் மார்பில் காளை குத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தீரன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
Advertisement
அருகிலிருந்தவர்கள் தீரனை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தீரனின் உறவினர்கள் கூறுகையில்,
”அந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் மாட்டுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில், மாணவர்களிடம் மாட்டை அடக்கினால், 200 ரூபாய் தருகிறேன் என கூறியுள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவர்கள் காளையை அடக்கியபோது இந்த விபத்து நடந்தது” எனத் தெரிவித்தனர்.
மேலும், மாணவனின் உயிரிழப்புக்கு காரணமான ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.