புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள கீழக்குறிச்சி கலங்காத கண்ட அய்யனார் கோயில் விழாவை முன்னிட்டு நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 60 காளைகள் அவிழ்க்கப்பட்ட நிலையில் 5 வீரர்கள் காயமடைந்தனர்.
வருடந்தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நிகழாண்டு காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன், கோட்டாட்சியர் அக்பர் அலி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 600-க்கும் மேற்பட்ட காளைகள் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படுகிறது.
இதையும் படிக்க: சச்சின் மறுவெளியீட்டுத் தேதி!
காளைகளை தழுவ 200 வீரர்கள் வீதம் 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். வாடிவாசலில் இருந்து சீற்றத்துடன் சீறி பாய்ந்து திமிராக வெளியேறும் காளைகள் தன்னை சீண்டி பார் என கட்டிளம் காளையர்களை கண்களால் மிரட்டி வருகின்றன. சில காளைகள் பிடிபட்டாலும் பல காளைகள் இளம் காளையர்களை மிரட்டிச் சென்றன.
போட்டியைக் காண பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
போட்டியில் காயமடைந்தவர்களுக்கு பொது மருத்துவர்கள் தலைமையில் மருத்துவக் குழுவினர் வாடிவாசல் அருகே முகாம் அமைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற வீரர்கள், சிறந்த காளைகளுக்கு பீரோ, கட்டில், வெள்ளி நாணயங்கள், தங்க நாணயங்கள் என பல்வேறு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது. இந்தப் போட்டிக்காக 7 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 170 காவலர்கள், ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: திருச்சியில் 7 தளங்களுடன் 'கலைஞர் நூலகம்' - அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.