வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக...
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை முழுமையாக இல்லை என மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீஸார், அதே பகுதியைச் சோ்ந்த 3 பேர்தான் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதன் தொடா்ச்சியாக கடந்த மாா்ச் 12 இல் நடைபெற்ற முதல் விசாரணை அமர்வில், குற்றம்சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய 3 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு, விசாரணை மாா்ச் 20-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2இல் குற்றம்சாட்டப்பட்ட காவலர் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரும் ஆஜராகி, தங்களுக்கும் இச்சம்பவத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றும், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் மனுதாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஏப். 3க்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் சி. பாரதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று(மார்ச் 27) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், காவல் துறை விசாரணை முழுமையாக இல்லை என்று தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றலாம் என்று மனுதாரர் வாதிட்டார்.
காவல் துறை விசாரணை முழுமையாக இல்லை என்று மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்து, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு பதிலளிக்கும்படி தெரிவித்து விசாரணையை ஜூன் 12 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிக்க: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப் போகும் ஜாக்பாட்! 8-வது ஊதியக் குழுவில் உயரும் சம்பளம்!