வருங்கால முதல்வர் என்று தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்தை குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருக்கும் சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பிறகு முதல்முறையாக அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றதுடன் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தவெக பொதுக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், பனையூர் கட்சி அலுவலகத்தில் இருந்து பொதுக் குழு நடைபெறும் திருவான்மியூர் மண்டபம் வரை விஜய்யை வரவேற்று போஸ்டர்களும் பேனர்களும் சாலையோரம் வைக்கப்பட்டுள்ளன.
தவெகவின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் சரவணன் பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ”தளபதி அவர்களை பொதுக் குழுவுக்கு அழைத்துவரும் தளபதி நெஞ்சில் குடியிருக்கும் எங்களின் அரசியல் ஆசான், தவெக பொதுச் செயலாளர், வருங்கால தமிழக முதலமைச்சரை வருக வருக என வரவேற்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சை போஸ்டர் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த போஸ்டர் குறித்த விளக்கத்தை தவெக தரப்பில் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.