முகப்பு
தமிழ்நாடு

பொறியியல் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (மே 7) தொடங்கவுள்ளது.

Updated On : 6 மே 2025, 3:23 am IST
பகிர்:

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நாளை (மே 7) தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழக அரசு சாா்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2025-2026) பிஇ, பிடெக் சோ்க்கைக்கான (அரசு ஒதுக்கீட்டு இடங்கள்) இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்கவுள்ளது. இணையவழி விண்ணப்பப் பதிவை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளாா்.

Advertisement

Advertisement

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உயா் கல்வித் துறை செயலா் சி.சமயமூா்த்தி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா் கலந்து கொள்ளவுள்ளனா்.