நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதே தடை உத்தரவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் பிறப்பித்துள்ளது.
கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு நாளில் ஆவடியில் அமைந்துள்ள ஒரு தேர்வு மையத்தில் கனமழை காரணமாக மின் தடை ஏற்பட்டதால் குறைந்த வெளிச்சத்தில் அசௌகரியமான சூழலில் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.
இதனையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு தேவை என, ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் முழு திறனுடன் தேர்வெழுத இயலாததை அவர்கள் சுட்டிக்காட்டி மறு தேர்வுக்கு உத்தரவிடக் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கை பரிசீலிப்பது குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இதுகுறித்து மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. அத்துடன், விசாரணையை வரும் ஜூன் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் மே 4 நடைபெற்றது. 22.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பதிவு செய்திருந்த இத்தோ்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கால தாமதமாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.