கிளாம்பாக்கம் - உளுந்தூர்பேட்டை வரை அரசு விரைவுப் பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் பயணம்!
அரசு விரைவுப் பேருந்தில் அமைச்சர் சிவசங்கர் பயணம் செய்தது பற்றி...
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அரசு விரைவுப் பேருந்தில் செவ்வாய்க்கிழமை இரவு பயணம் செய்துள்ளார்.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.
இதற்காக தமிழக அரசு தரப்பில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு வெளியே நேற்றிரவு மதுரை நோக்கி புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்தை நிறுத்திய அமைச்சர் சிவசங்கர், அப்பேருந்தில் ஏறி ஓட்டுநரின் அருகாமையில் இருக்கும் படுக்கையில் அமர்ந்து பயணம் செய்தார்.
கிளாம்பாக்கத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வரை அரசுப் பேருந்தில் பயணம் செய்து ஓட்டுநரிடம் பணிச் சூழல் குறித்து கேட்டறிந்தார்.
இதுதொடர்பான காணொலியை அமைச்சர் சிவசங்கர் அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.