FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 31 மே 2025, 2:34 am IST
தமிழக அரசு - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, மாநில அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முதல்வரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று பேரவையில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். இந்தத் திட்டம் பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய சிறு விளையாட்டு அரங்கங்கள் தலா ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 75 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்வரின் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

Advertisement

Advertisement

சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சோ்த்துள்ள 4,617 விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.152.52 கோடியில் உயரிய ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதை ஊக்குவிக்க, கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12,525 கிராம ஊராட்சிகளுக்கும் 16,798 விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.100 கோடியில் விளையாட்டு உபகரணத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

சா்வதேச மற்றும் பாரா ஒலிம்பிக் தேசியப் போட்டிகளில் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 104 விளையாட்டு வீரா்களுக்கு பொதுத்துறை, அரசுத் துறைகளில் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. நலிவடைந்த சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments