கெலமங்கலம் அருகே ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் கொல்லப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (38), கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாரதி (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 மற்றும 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பாரதிக்கு 3-ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், கடந்த 4-ஆம் தேதி குழந்தைக்கு பால் கொடுத்து தூங்கவைத்த சிறிது நேரத்தில் குழந்தை சலனமற்று இருந்ததால், செலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பாரதி கொண்டுசென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்நிலையில், குழந்தை இறந்த துக்கமின்றி பாரதி அடிக்கடி கைப் பேசியில் யாருடனோ பேசி வந்துள்ளார்.
இதைக் கவனித்த அவரது கணவர் சுரேஷ், சந்தேகமடைந்து பாரதி இல்லாதபோது அவர் வைத்துள்ள பொருள்களை சோதனையிட்டார். அதில், அவரிடம் மேலும் ஒரு கைப்பேசி இருந்தது தெரியவந்தது. அதில், பக்கத்து வீட்டு பெண் சுமித்ராவும் (20), பாரதியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ், இதுகுறித்து கெலமங்கலம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், பாரதியும், சுமித்ராவும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில் பாரதிக்கு ஆண் குழந்தை பிறந்ததால், அவர் சுமித்ராவுடன் பழகுவதை குறைத்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த சுமித்ரா இதுகுறித்து பாரதியிடம் கூறியதையடுத்து, அவர் குழந்தையின் சுழுத்தை நெரித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, பாரதி மற்றும் சுமித்ரா இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனிடையே உடற்கூராய்வு செய்யாமல் மயானத்தில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவ குழுவினர் வெள்ளிக்கிழமை உடற்கூராய்வு செய்தனர். இதனால் அந்த பகுதியில் கிராம மக்கள் கூடியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.