கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல்: இபிஎஸ் விமர்சனம்!
ராஜபாளையம் அருகே கோயில் காவலர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது பற்றி இபிஎஸ் விமர்சனம்..
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே கோயில் காவலர்கள் இருவர் கொலை செய்யப்பட்டு கோயில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,
"விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு முதல்வரே முழு பொறுப்பு.
ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் முதல்வர் தலைமையிலான தோல்வி மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.