சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புத்தக காட்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெறும் முற்போக்கு புத்தக காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், திமுக75_அறிவுத்திருவிழா முற்போக்குப் புத்தகக் காட்சி: கொள்கைக் கருவூலம்!
வள்ளுவர் கோட்டத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் இருந்து திராவிடம், அம்பேத்கரியம், கம்யூனிசம், பெண்ணியம் என அணிவரிசையில் அமைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்டு, அங்கு வந்திருந்த வாசகர்கள், ஆர்வலர்கள், பதிப்பகத்தாருடன் உரையாடியது மனநிறைவளிக்கும் அனுபவமாக அமைந்தது.
Advertisement
குறிப்பாக, 'Carry on, but remember' எனும் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பைக் கண்டதும் நம் அண்ணன் அன்று விடுத்த எச்சரிக்கை இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதே என வியந்தேன். என் பங்கிற்கு, அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை வாங்கிவிட்டேன்.
அஜித் பட பாடலைப் பாடிய பிகாரின் இளம் எம்எல்ஏ!
வாசிப்பை ஊக்குவிக்கும் தவறவிடக்கூடாத நிகழ்வாக இதனை நடத்திக் காட்டியுள்ள உதயநிதி மற்றும் அவரது திமுக இளைஞர் அணிக்கும் மீண்டுமொருமுறை எனது பாராட்டுகள்! வரும் ஆண்டுகளிலும் தொடரட்டும் அறிவுத்திருவிழா! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் ‘திமுக 75 அறிவுத் திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி அன்றைய தினம் தொடங்கப்பட்ட சென்னை முற்போக்கு புத்தக காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.