கோவை, மதுரையில் மெட்ரோ அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி கோவை வந்தபோது, விமான நிலையத்தில் அவரை வரவேற்ற எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுவையும் அளித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவில், “எனது தலைமையிலான அம்மாவின் அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அறிவித்த கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைந்து நிறைவேற்றித் தர தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் கோவை மாநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்யப்பட்டு மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனம் தயாரித்து தமிழக அரசிடம் அளித்திருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு ஒப்புதல் அளித்து இருந்தது.
இந்தத் திட்டங்களுக்கான விரிவான அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த நிலையில், அதைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி விரிவான திட்ட அறிக்கை கோப்புகளை மெட்ரோ நிறுவனத்துக்கு மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
மெட்ரோ ரயில் திட்டத்தை 20 லட்சத்துக்கும் மேலான மக்கள்தொகை கொண்ட மாநகரங்களில் செயல்படுத்தும் நிலை உள்ளதையும், அதற்கான ஆவணங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், மதுரை, கோவை மாநகரங்களில் அதைவிட குறைவான மக்கள்தொகை இருப்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்கவில்லை எனவும் அதில் சில விளக்கங்கள் கோரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை, மதுரையில் மெட்ரோ அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.