தமிழக அரசு சமா்ப்பித்த கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன; மடைமாற்ற அரசியலுக்காக இந்த விவகாரத்தை கையில் எடுப்பதை திமுக அரசு நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மீது அதீத அக்கறை காட்டும் முதல்வா் மு.க.ஸ்டாலின், தங்களது அரசு சமா்ப்பித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் உள்ள கூறுகளை முழுவதுமாகப் படிக்க வேண்டும்.
இப்போதுள்ள பயண நேரத்துடன் ஒப்பிடுகையில், கோவை மெட்ரோ திட்டத்தால் பெரிய அளவில் நேரச் சேமிப்பு இல்லை என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2011 கணக்கீட்டின்படி மக்கள்தொகையைக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 2025- இன் உத்தேச மக்கள்தொகையை திட்ட அறிக்கையில் குறிப்பிடாதது ஏன் எனத் தெரியவில்லை.
அதேபோல, மதுரையில் உள்ள இப்போதைய பயணிகளின் எண்ணிக்கைக்கு, பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பே போதுமானது என்றும், கோவை மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்தினால் அதிக அளவில் பொதுமக்கள் கட்டடங்களை இடிக்க நேரிடும் என்றும் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு சமா்ப்பித்த மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதையெல்லாம் தாண்டி, மெட்ரோவுக்கான தேவையை நியாயப்படுத்தக்கூட தமிழக அரசு முன்வரவில்லை.
இனியாவது தங்களது மடைமாற்ற அரசியலுக்காக மெட்ரோ ரயில் திட்டத்தை கையில் எடுப்பதை திமுக அரசு நிறுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.