முகப்பு
தமிழ்நாடு

எங்கள் குறி தேர்தல்தான்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி தொடர்பாக...

Updated On : 24 நவம்பர், 2025 at 8:23 AM
அமைச்சர் எஸ். ரகுபதி (கோப்புப்படம்)
பகிர்:

புதுக்கோட்டை: யார் ஆச்சரியக் குறியாக இருந்தாலும், தற்குறியாக இருந்தாலும் கவலையில்லை, எங்கள் குறி தேர்தல்தான் என்றார் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

தவெக ஆச்சரியக்குறியாக இருந்தாலும், தற்குறியாக இருந்தாலும், எந்தக் குறியாக இருந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. எங்கள் குறி தேர்தல் குறி. யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. எங்களுக்கு யாரும் போட்டியும் கிடையாது.

களத்தில் இருக்கக் கூடிய அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம். அவர்கள் அனைவருமே அரசியல் எதிரிகள்தானே தவிர, தனிப்பட்ட எந்த விரோதமும் யாரிடமும் கிடையாது.

தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்று சொன்னால் திராவிட மாடல் ஆட்சி வந்தால்தான் முடியும் என்பதை, இந்த ஐந்தாண்டுகளில் நிரூபித்துள்ளோம். சொன்னதைச் செய்துள்ளோம், செய்வதைத்தான் சொல்லியுள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது கிடையாது. பலர் ஏமாற்று வேலைகளை செய்யலாம், எந்த ஏமாற்று வேலையும் தமிழ்நாடு மக்கள் மத்தியில் எடுபடாது.

அனைவருமே முடிவு செய்துதான் தேர்தல் வாக்குறுதியைச் சொல்கிறோம். பலருடன் கூட்டாக விவாதித்துத் தருவதுதான் தேர்தல் அறிக்கை. கடந்த காலத்தில் நாங்கள் தந்த டிவி தற்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது. நடுவில் மின்விசிறி போன்றவற்றைக் கொடுத்தார்கள். அவை காயலான் கடையில்கூட எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லக்கூடிய அளவில்தான் இருக்கின்றன. தரமான பொருள்களை தரும் தரமான ஆட்சி முதல்வர் மு.க .ஸ்டாலின் ஆட்சி.

அறிவுத் திருவிழா என்பது தமிழர்களின் வரலாற்றை திராவிடத்தின் வரலாற்றை தற்போதுள்ள இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காக திமுக நடத்திய திருவிழா. இதுபற்றிய புரிதல், அக்கறை அதிமுகவுக்கு கிடையாது. அவர்களது ஒரே எண்ணம் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பதுதான். தமிழர்களின் பண்பாட்டைப் பற்றி, கலாசாரத்தைப் பற்றியோ அவர்களுக்கு கவலை கிடையாது.

விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத்தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்திக் கொள்கிறார். அதற்கு ஏன் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது.

காங்கிரஸில் இருந்து எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்துள்ளனர் அதற்குப் பிறகும் தவெக- காங்கிரஸ் கூட்டணியா என்ற கேள்வியே தேவையில்லாதது என்றார் ரகுபதி.

summary

Interview given by Minister Raghupathi in Pudukkottai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.