திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை (நவ. 29) நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் டிச. 1 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் 19 அமா்வுகள் இடம்பெறவுள்ளன. இதில், குற்ற வழக்குகளில் 30 நாள்களுக்கு மேல் சிறையில் இருக்கும் பிரதமா், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா மற்றும் நெடுஞ்சாலை திருத்தச் சட்டம், சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் திமுக உறுப்பினா்கள் எவ்வாறு செயல்படுவது, எத்தகைய விவகாரங்களைக் கவனப்படுத்திப் பேசுவது உள்ளிட்டவை குறித்து முதல்வா் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. குறிப்பாக, எஸ்ஐஆா் உள்ளிட்ட விவகாரத்தை எழுப்புவது குறித்தும் முடிவு செய்யப்படவுள்ளது.
இக்கூட்டத்தில், திமுகவின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களும் பங்கேற்க வேண்டும் என்று பொதுச் செயலா் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளாா்.