வேதாரண்யத்தில் கடல் சீற்றம்! தரைக்காற்றுடன் சாரல் மழை!
வேதாரண்யத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது பற்றி...
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று(நவ. 28) வழக்கத்தைவிட வேகமான தரைக்காற்றுடன் பரவலான சாரல் மழைப்பொழிவு ஏற்பட்டதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது.
இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல் இலங்கையில் வரலாறு காணாத மழைப்பொழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தரைப்பகுதி வழியே வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக காவிரிப் படுகை, தென் மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் இலங்கைக்கு மிக அருகில் அமைந்துள்ள கோடியக்கரை வேதாரண்யம் பகுதியில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து வழக்கத்தைவிட வேகமாக சுழன்று வீசும் தரைக்காற்று கடலை நோக்கி வீசி வருகிறது. காற்றின் காரணமாக அவ்வப்போது மின்சாரம் தடைப்பட்டது.
வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு காற்றுடன் இணைந்த சாரல் மழைப் பொழிவும் ஏற்பட்டது. மழையின் காரணமாக பிற்பகலுக்குப் பிறகு பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடல் பரப்பு சீற்றமாகக் காணப்பட்டது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.