காஞ்சிபுரம் பெண்கள் காப்பகத்திலிருந்து தப்பித்த 4 சிறுமிகள்!
காஞ்சிபுரம் பெண்கள் காப்பகத்திலிருந்து 4 சிறுமிகள் தப்பிச் சென்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில், தூங்கிக் கொண்டிருந்த பாதுகாவலரிடம் இருந்து சாவியை எடுத்து கேட்டை திறந்து நான்கு சிறுமிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் பற்றி அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் பெண்கள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் தாத்திமேடு பகுதியில், தமிழ்நாடு அரசு சார்பில் குழந்தைகள் மற்றும் சிறப்பு சேவை துறை சார்பாக அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி, கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 12 மணி அளவில் மூன்று விடுதி காப்பாளர்களும் அங்குள்ள பெண் குழந்தைகளிடம் பேசிவிட்டு இரவு பூட்டிக்கொண்டு சாவியை அங்கு பணிபுரியும் ஷோபனா என்பவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் ஷோபனாவிடம் இருந்து சாவியை நான்கு பெண்கள் மெதுவாக எடுத்து கேட்டை திறந்து காப்பகத்தின் பின் பக்கம் உள்ள மதில் சுவர் மீது ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நான்கு பெண்களில் மூன்று பேர் குன்றத்தூர் பகுதியையும் ஒருவர் காஞ்சிபுரம் பகுதியையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அரசு அலுவலர் மற்றும் காஞ்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதில் சுவர் மீதிருந்த இரும்பு வலை துருப்பிடித்து இருந்ததால் அதனை நீக்கிவிட்டு புதியதாக அமைக்கும் பணி நடந்து வருகிறது. எனவே, இரும்பு வலையை அகற்றிய நிலையில் தற்போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.