'விளிம்புநிலை மக்களிடையே கல்வி, தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், கணினி எழுத்தறிவுத் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்துதல், தொலைதூர மலைவாழ் பள்ளிகளின் அடிப்படை, கல்வி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளேன். குறிப்பாக, பள்ளிப்படிப்பை இடைநிறுத்தியவர்கள், நரிக்குறவப் பெண்கள், சமூக ரீதியாகப் பின்தங்கிய பிரிவைச் சார்ந்தவர்களுக்கு இந்தப் பயிற்சிகள் புதிய நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கியுள்ளன' என்கிறார், சமூகச் சேவையாளரும், குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரிப் பேராசிரியருமான கே. ஜெயபிரகாஷ்.
கொல்லிமலையில் வாழும் பழங்குடியின, விளிம்பு நிலை மக்களின் கல்வி, தொழில் மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான அறிவுக் கண்களைத் திறப்பதை தன்னுடைய கொள்கையாகக் கொண்டு செயல்படும் அவரிடம் பேசியபோது:
'நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, வில்லிபாளையம் கிராமத்தில் பிறந்தேன். எனக்கு நாற்பத்தாறு வயதாகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணினி, தகவல் அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியராகவும், உள்தர உறுதிப்பாட்டு பிரிவு துணை இயக்குநராகவும் ஏற்கெனவே பணியாற்றினேன்.
எண்ம, வாழ்வாதார மேம்பாட்டுத் துறையில் இதுவரை 12 கணினிப் பயிற்சித் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கல்வராயன் மலை(கருமந்துறை), கொல்லிமலை, பச்சமலை, சேர்வராயன் மலை மற்றும் அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 380-க்கும் மேற்பட்ட பழங்குடி மற்றும் கிராமப்புறப் பெண்களுக்கு எண்மத் திறன்கள் கற்றுத்தரப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சித் திட்டங்களின் பயனாளிகள் தற்போது தொழில் முனைவோராகவும், சுயதொழில் செய்வோராகவும், பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களாகவும் உயர்ந்துள்ளனர். இடைநிறுத்தப்பட்ட கல்வியை பலர் தொடர்ந்து வருகின்றனர். பழங்குடி சமூகங்களில் பள்ளி இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது ஆறுதலைத் தருகிறது.
நாமக்கல், சேலம், திருச்சி, நீலகிரி, கடலூர், திருவண்ணாமலை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், மதுரை, கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 உண்டு உறைவிடப் பள்ளிகளிலும், விடுதிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை குழுக்கள் வாயிலாக ஏற்படுத்திக் கொடுத்து வருகிறேன். 11,700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினிப் பயிற்சிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்புகள், சமையலறை உபகரணங்கள், வகுப்பறைத் தளவாடங்கள், விளையாட்டுப் பொருள்கள், நாப்கின் எரியூட்டிகள் போன்ற அத்தியாவசிய வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் அரசு பழங்குடியின பள்ளிக்கு முழுமையான இயற்பியல் ஆய்வகம் நிறுவப்பட்டது. தொலைதூர மலை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பழங்குடியின பள்ளிகள் தன்னிறைவு பெற்ற கல்வி நிறுவனங்களாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சிறப்புப் பயிற்சிகள் மூலம் 45 பழங்குடியின பெண்கள் தொழில் திறன்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் 40 பேர் தையல் நிலையங்களை நடத்தி வருகின்றனர். நரிக்குறவ சமுதாயப் பெண்கள் ஐந்துபேர் மணிகள் கோர்த்து ஆபரணங்கள் தயாரித்து, தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளனர். கல்வித்துறையில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின, நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கணினி அறிவு பெற்று, உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
கல்வியில் பழங்குடியின மாணவர்களும், தொழில் துறையில் மலைவாழ் பெண்களும் சாதனை படைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. அவர்களின் வெற்றிக்கு நான் சிறிய அணிலாக இருந்து வருகிறேன்' என்கிறார் ஜெயபிரகாஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.