திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!
திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் 7 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று(நவ. 30) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 வார காலமாக பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பின.
இதில் பிரதான அணையான பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 45 அடியைக் கடந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீரானது மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரி நீா் திறந்துவிடப்பட்ட நிலையில், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கன்னியாகுமரியில் மழையின் அளவு குறைந்ததால், திற்பரப்பு அருவியில் 7 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறைவாக தண்ணீர் கொட்டும் இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல்!