மதுரை: தமிழகத்தில், இனி மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தக் கட்சியும் கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றபோது, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதுகுறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த வழிகாட்டு விதிமுறைகள், நெறிமுறைகளை வகுப்பது குறித்து உயர்நிலைக் குழு அமைத்து விதிகளை வகுத்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதனை வெளியிட்டு, அரசாணை பிறப்பிக்கும் வரை, அரசியல் கட்சிகளுக்கு, நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று உத்தரவிட்டனர். ஏற்கனவே அனுமதி பெற்ற கூட்டங்களை நடத்திக் கொள்ள தடையில்லை.
மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும், அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்திக் கொள்ள என்று ஆட்சியர்களால் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படலாம். அவ்வாறு கூட்டம் நடத்தப்படும் இடங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
விசாரணை தொடங்கும் நிலையிலேயே, சிபிஐ விசாரணை கோர முடியாது என்றும், விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால்தான் சிபிஐ விசாரணை கோர முடியும் என்றும் கூறி நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
தொடர்ந்து, கரூர் நெரிசல் சம்பவத்தில் அதிக இழப்பீடு கோரிய வழக்குகளில் தவெக மற்றும் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.