முகப்பு
தமிழ்நாடு

பல அஜித்குமார் பலியாக நேரிடும்! திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக திமுக அரசு அடித்தளமிடுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Updated On : 5 அக்டோபர், 2025 at 6:24 AM
பகிர்:

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக திமுக அரசு அடித்தளமிடுவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நெல்லையில் கடந்த 2 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 217 பேரை மாவட்ட காவல்துறை காயப்படுத்தியதாக திமுக அரசு மீது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

``நெல்லை மாவட்டக் காவல்துறையால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 217 பேர் கை, கால்களில் காயமுற்று மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரிய வந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

"குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்" என்று ஆட்சி அமைக்கும் முன் வீர வசனம் பேசிவிட்டு, ஆட்சி அரியணை ஏறியதும் குற்றங்கள் நிகழாது தடுப்பதைவிட்டு, குற்றம் புரிந்ததாக சந்தேகப்படும் நபர்களை அடித்து அச்சுறுத்துவது தான் திராவிட மாடலா?

கடந்த 2023 ஆம் ஆண்டில் குற்றவாளிகளின் பற்களை உடைத்ததால் நெல்லை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்பும், இன்றுவரை நெல்லை காவல்துறையினர் பாடம் கற்றுக்கொள்ளாதது ஏன்?

மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை, திமுகவினர் குற்றம் புரியும்போது ஏவல்துறையாகவும், அப்பாவிகள் அகப்படும்போது அராஜக துறையாகவும் மாறுவது ஏன்?

இப்படித் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் குரூரப்போக்குடன் செயல்படும் காவல்துறையால் மேலும் பல அப்பாவி அஜித்குமார்கள் பலியாக நேரிடுமே தவிர, பொதுமக்களின் பாதுகாப்பு என்றும் மேம்படாது என்பதை சட்டம் ஒழுங்கை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இனியாவது உணர்ந்து கொள்ளவேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: விபத்தை ஏற்படுத்திய விஜய் பிரசார வாகனம், ஓட்டுநர் மீது வழக்கு!

summary

BJP Nainar Nagenthran slams DMK Govt for custodial tortures

முழு கட்டுரையைப் படிக்க →