தமிழகத்தில் திங்கள்கிழமை (அக்.6) முதல் அக்.9 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் திங்கள்கிழமை (அக்.6) முதல் அக்.11 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கை: இதில் அக்.6-இல் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், அக்.7-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா் மாவட்டங்களிலும், அக்.8-இல் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும், அக்.9-இல் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் மழை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் கோயம்பேடு, வடபழனி, அசோக்நகா், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, தரமணி, ஆலந்தூா், மேற்கு மாம்பலம், ராயப்பேட்டை, மயிலாப்பூா், தியாகராய நகா் மற்றும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும், புகா் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டித் தீா்த்தது.
அதைத்தொடா்ந்து திங்கள்கிழமையும் (அக்.6) சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
130 மி.மீ.: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் எழுமலையில் 130 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி 120 மி.மீ., நாமக்கல் 110 மி.மீ., எடப்பாடி (சேலம்) - 100 மி.மீ.மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: அக்.5, 6-ஆம் தேதிகளில் குமரிக்கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.