விழுப்புரம்: மின் ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்!
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி...
விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் இரண்டாவது நாளாக இன்று(அக்.8) காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள்
தமிழ்நாடு மின் வாரியத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ள கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி மாற்றம் வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு 2019, டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய 6 சதவிகித ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும், விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தை நேற்று (அக்.7) செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
Advertisement
Advertisement
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் இரண்டாவது நாளாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலச் செயலர் கே. அம்பிகாபதி தலைமை வகித்தார்.
போராட்டம் தொடரும்...
இந்தப் போராட்டத்தில் திட்டக்குழு தலைவர் ஆர்.சேகர், செயலர் ஆர். அருள், பொருளாளர் கண்ணன், கோட்டச் செயலர்கள் ஏ. கன்னியப்பன் (செஞ்சி), கே.ஏழுமலை (கண்டமங்கலம்), அசோக்குமார் (விழுப்புரம்) உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்டத் தலைவர் சேகர் கூறுகையில், “மின் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எங்கள் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இதன் காரணமாக மின் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்படலாம்” என்று தெரிவித்தார்.
Villupuram: Electricity workers' protest continues for the second day!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.