தவெக விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடையாக இல்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
கரூரில் கடந்த 27-ம்தேதி இரவு நடைபெற்ற தவெக பிரசாரச் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவியாக 41 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.50,000 வழங்கும் நிகழ்ச்சி கரூரில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்து, 41 பேரின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த நிகழ்ச்சியின்போது, பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை அரசு பரிசீலித்து, அரசு வேலை வழங்க வேண்டும் என முதல்வரை நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முறையிட இருக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் முதல்வர் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார் என்பதை நாடு அறியும். மேலும் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து அவர்கள் அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆறுதல் கூறியிருக்கிறார். இறந்தவர்கள் எந்தக்கட்சி என்பது முக்கியம் அல்ல. அவர்களின் துக்கத்தை சிறிதளவாவது பங்கீட்டுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் இன்று அவர்களை சந்தித்துள்ளோம்.
தவெக வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே டிவிசன் பெஞ்சில் இருக்கும்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏன் விசாரிக்க என்ன தேவை என்ற விளக்கத்தைத்தான் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அதற்கு தடையாக இல்லை. விசாரணை சுதந்திரமாக நடைபெற்று வருகிறது என்றார் அவர். பேட்டியின்போது கரூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.