கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தில் நீதி வெல்லும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இரண்டே சொற்களில் நீதி வெல்லும் என விஜய் பதிவிட்டுள்ளார்.
இதன்மூலம், இந்த விவகாரம் தொடர்பாக முதல்முறையாக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு கரூர் நெரிசலில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து விடியோ வெளியிட்டிருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, அதிகப்படியான கூட்டத்தால் நேர்ந்த நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
மேலும், வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலும் சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், கரூர் விவகாரத்தில் விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் 'நீதி வெல்லும்' என விஜய் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கரூர் பலி: இலவச சட்ட உதவி மையத்தை அணுகிய பாதிக்கப்பட்டவர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.