கரூரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் கரூர் ஏமூர்புதூரைச் சேர்ந்த சர்மிளாவின் மகன் பிரித்தி உயிரிழந்தான். இதேபோல அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி சந்திரகலா என்பவரும் உயிரிழந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி.அஸ்ராகர்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியுள்ளது.
இந்நிலையில் சர்மிளாவின் கணவர் பன்னீர்செல்வம் என்பவர் தனது மகன் பிரித்தி கூட்ட நெரிசலில் இறந்தது தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என அன்மையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தனது கணவர் வழக்கு தாக்கல் செய்தது தனக்குத் தெரியாது என்றும் தனது கணவர் என்னிடம் இருந்து பிரிந்து 8 ஆண்டுகளாகிவிட்டதும் என்றும் மகன் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யும் இடத்திற்குகூட அவர் வரவில்லை என்றும் சமூக ஊடகங்களில் சர்மிளாவின் பேட்டி பரவியது.
இதேபோல செல்வராஜ் தனது மனைவி சந்திரகலா இறந்ததற்கு கூடுதல் நிவாரணம் கேட்டு வாங்கித்தருவதாகவும், குடும்பத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறியதால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக, செல்வராஜ் பேசியது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவின.
இந்நிலையில் செல்வராஜ், தன்னிடம் ஏதோ அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வழக்குரைஞர் கையெழுத்து வாங்கினார், பின்னர்தான் தெரிந்தது, அவர் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்குக்கோரி மனுத்தாக்கல் செய்தார் என்று கூறி மீண்டும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.
இதையடுத்து சர்மிளா, அவரது சகோதரர் சந்துரு மற்றும் செல்வராஜ் ஆகியோர் கரூர் ஐந்துரோடு பகுதியில் உள்ள மக்கள் நீதிமன்றத்திற்கு திங்கள்கிழமை வழக்குரைஞர் தமிழ்முரசு என்பவருடன் வந்தனர்.
அங்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான அனுராதாவிடம், உச்சநீதிமன்ற சிபிஐ வழக்குத் தொடர்பாக, தங்கள் தரப்பில் இலவசமாக வாதாட வழக்குரைஞர் நியமிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு சார்பு நீதிபதி ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
பின்னர் சர்மிளா மற்றும் செல்வராஜூடன் வந்த வழக்குரைஞர் தமிழ்முரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 27-ம்தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்ட நெரிசலில் இறந்த சர்மிளா மற்றும் செல்வராஜுக்கும் உச்சநீதிமன்ற விசாரணை நடைபெற்றது. இதில் எங்களது வழக்குரைஞர் அலுவலகமான பசுபதிபாளையத்தில் உள்ள அலுவலகத்தில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ரங்கோலி என்பவரின் மூலம் வீடியோ கான்பரன்சிங்கில் ஆஜராகினர். இதில் செல்வராஜ் வழக்குப்போடாமல் அவரது கையெழுத்தை வைத்து இன்னொருவர் வழக்குப் போட்டுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக செல்வராஜ் வீடியோ கான்பரன்சிங்கில் தெளிவாக கூறிவிட்டார். மேலும் சர்மிளா என்பவரின் கணவர் பன்னீர்செல்வம் என்பவர் தனது மகன் நெரிசலில் இறந்ததாக கூறி சிபிஐ விசாரிக்க வேண்டும் என யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்து ஏதோ பணத்தாசைக்காக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனால் இருவரும் ஏழையாக இருப்பதால் தங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் வாதாட வழக்குரைஞர்கள் நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.