நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றரை மாத சிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (வயது 100), கடந்த ஆக. 22 ஆம் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனிடையே, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நல்லகண்ணுக்கு மூத்த மருத்துவர்கள் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (அக். 10) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நல்லகண்ணுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.