தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழைபெய்து வருகிறது. சென்னையிலும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதோடு குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் அக்.24 ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும். இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை போன்ற மேற்குத்தொடர்ச்சி மாவட்டங்களில் மிக கனமழையை எதிர்பார்க்கலாம்.
குறிப்பாக, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.