முகப்பு
தமிழ்நாடு

தொடர் மழை! ஏற்காடு மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

தொடர் மழை காரணமாக ஏற்காடு மலை அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்

Updated On : 23 அக்டோபர், 2025 at 7:42 AM
ஏற்காடு - கோப்புப்படம்
பகிர்:

சேலம்: தொடர் கனமழை காரணமாக ஏற்காடு வர வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதையடுத்து, ஏற்காடு மலை அடிவாரத்திலேயே வாகனங்கள் சோதித்து திருப்பி அனுப்பப்படுகின்றன.

ஏற்காடு மலைக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என்றும், மலைப் பாதையில் கனரக வாகனங்களுக்கு இரண்டு நாள்கள் தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வாகனங்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படுகின்றன.

தொடா் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏற்காடு பிரதான மலைச் சாலை, குப்பனூா் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு 24-ஆம் தேதிவரை தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் தொடா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பாதைகள் வழியாக ஆங்காங்கே தண்ணீா் வழிந்தோடுகிறது.

ஒரு சில நாள்கள் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான மலைச் சாலையில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனப் போக்குவரத்துக்கும், சேலத்திலிருந்து குப்பனூா் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் நான்குசக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனப் போக்குவரத்துக்கும் இரண்டு நாள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்காடு மலைப் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் யாரும் இன்று முதல் 24ஆம் தேதி வரை ஏற்காடு வர வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.