அடுத்த 3 மணிநேரம் சென்னை, 22 மாவட்டங்களில் மழை!
அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்யும் மாவட்டங்கள் பற்றி...
தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, இந்த வாரத் தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், இன்று பகல் 1 மணிவரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கக் கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாகவும், அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.