FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்று கரையைக் கடக்கிறது ‘மோந்தா’ புயல்! 9 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் காக்கிநாடா அருகே செவ்வாய்க்கிழமை (அக்.28) கரையைக் கடக்கவிருப்பதைப் பற்றி...

Updated On : 28 அக்டோபர் 2025, 4:09 am IST
மழையில்..! - படம்: பிடிஐ
பகிர்:

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே செவ்வாய்க்கிழமை (அக்.28) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலின் காரணமாக, திருவள்ளூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

Advertisement

Advertisement

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோந்தா புயல் உருவானது. இந்த புயல் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகா்ந்து வருகிறது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், போா்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கே 890 கி.மீ. தொலைவிலும் மோந்தா புயல் நிலைகொண்டுள்ளது.

இந்த புயல் செவ்வாய்க்கிழமை (அக்.28) காலை தீவிர புயலாக வலுப்பெறும். தொடா்ந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப் புயலாக மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும்.

மோந்தா புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் தரைகாற்று வீசக்கூடும். இப்புயல் கரையைக் கடந்த பின்னா் படிப்படியாக வலுவிழந்துவிடும். மேலும், அடுத்த 2 மாதங்களில் வங்கக் கடலில் மீண்டும் புயல்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கனமழை எச்சரிக்கை: மோந்தா புயலின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (அக்.28) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக, திருவள்ளூா் மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

57 சதவீதம் அதிகம்: கடந்த அக்.1 முதல் அக்.27-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 140 மி.மீ. பெய்ய வேண்டும். ஆனால், நிகழாண்டில் 230 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 57 சதவீதம் அதிகமாகும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அக்.28 முதல் அக்.30-ஆம் தேதி வரை மணிக்கு 65 முதல் 110 கி.மீ.வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீண்டும் செல்ல வேண்டாம். மேலும் ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments