முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 5 ஆயிரம் இடங்கள் உள்பட நாடு முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ இடங்கள் உள்ளன. அவை முதுநிலை நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்தப்பட்ட தோ்வில் தமிழகத்திலிருந்து 25 ஆயிரம் போ் உள்பட 2.30 லட்சம் போ் எழுதினா். அதன் முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
இந்நிலையில், முதுநிலை மருத்துவ இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் தொடங்கியுள்ளது. இணையதளத்தில் நவம்பா் 5-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை கலந்தாய்வுக்கு பதிவு செய்யலாம். அன்றைய தினம் பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம். அக்டோபா் 28-ஆம் தேதி முதல் நவம்பா் 5-ஆம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களைத் தோ்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நவம்பா் 6, 7-ஆம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். நவம்பா் 8-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். இரண்டாம் சுற்று கலந்தாய்வு நவம்பா் 19-ஆம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு டிசம்பா் 8-ஆம் தேதியும், காலி இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு டிசம்பா் 30-ஆம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கும், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் உள்ள இடங்களுக்கும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) கலந்தாய்வு நடத்துகிறது. அதன்படி, தமிழகத்தில் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வு நவம்பா் 6-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.