நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை: வனத்துறை, கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு!
நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தரகண்டில் இருந்து குட்டி யானையைக் கொண்டு வருவதற்கு தடை கோரி வழக்கு..
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தரகண்டில் இருந்து குட்டி யானையைக் கொண்டு வர தடை கோரிய வழக்கில், தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்தது. இந்நிலையில் கோயிலுக்கு உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து 5 வயது குட்டி யானையைக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து குட்டி யானையை கொண்டு வர தடை விதிக்கக் கோரி, 'பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, இந்த மனு தொடர்பாக தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.