இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்
பிரதமர் மோடி குறித்துப் பேசிய மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்..
பிரதமர், திமுகவினரைக் குறிப்பிட்டதை தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதல்வர் வகிக்கும் பதவிக்கே அவமானம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பிரதமர் மோடி பிகார் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது, 'தமிழ்நாட்டில் வேலை செய்யும் உழைக்கும் பிகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர்' என்று பேசியிருந்தார்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்றும் தமிழர்களுக்கும் பிகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை,
"திமுகவின் ஊழலும், போலி வேடமும் மக்கள் மத்தியில் அம்பலப்படும்போதெல்லாம், அதனை மடைமாற்ற, மக்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் வழக்கம். நகராட்சி நிர்வாகத் துறையில், ரூ. 888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். உழைக்கும் பிகார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் மோடி கூறியது முழுக்க முழுக்க உண்மை.
தமிழக அமைச்சர்கள் பொன்முடி, டி.ஆர்.பி. ராஜா, எம்பி தயாநிதி மாறன், ஆ.ராசா தொடங்கி, கடைக்கோடி திமுக நிர்வாகிகள் வரை, பிகார் மக்களை ஏளனமாகப் பேசியதும், அவர்கள் மீது தாக்குதலுக்குத் தூண்டுவதைப் போல பேசியதும், தமிழக மக்கள் அறிவார்கள்.
முதல்வர் வெளியிட்டுள்ள இந்த காணொளியிலேயே, நமது பிரதமர், தமிழகத்தில் பிகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகிறார்கள் என்று பேசியிருப்பதுதான் இருக்கிறது. எப்படி, திமுகவினர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக இருக்கிறார்களோ, அதேபோல, பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதல்வர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.
தாத்தா காலத்தில் தொடங்கிய இந்த அற்ப அரசியலை, பேரன் காலத்திலும் தொடர்வதை, முதலமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
BJP annamalai replied to mk stalin on pm modi statement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.