13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!
தேனி சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி...
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் கடந்த 13 நாள்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க விதிக்கப்பட்ட தடையை வனத்துறையினர் நீக்கினர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த அக். 18 ஆம் தேதி முதல் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .
இதன் காரணமாக கடந்த 13 நாள்களாக பாதுகாப்பு கருதி சுருளி அருவியில் குளிக்க, சுற்றுலாப் பயணிகளுக்கு கம்பம் கிழக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
தற்போது மழைப்பொழிவு குறைந்த நிலையிலும் அருவியில் நீர்வரத்து சீரானது. மேலும் வெள்ளத்தால் சேதமான பகுதிகளை சீரமைப்பு செய்து தொடர்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அருவியில் வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர்.