ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது:
”பல நூறு ஆண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன்.
இங்கே நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் தெற்காசிய அரசியலைப் புரட்டிப் போட்ட இயக்கமான திமுகவின் தலைவராக மட்டுமல்ல பெரியாருடைய பேரன் என்கிற கம்பீரத்தோடு வந்துள்ளேன்.
பகுத்தறிவு பகலவன் அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில திறந்து வைப்பதை எனது வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.
பகுத்தறிவு உலகம் முழுவதும் பரவி வருவது என்பதன் அடையாளம்தான் இந்த படத்திறப்பு நிகழ்ச்சி. பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளம் அவருடைய படத்திறப்பு விழா.
பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்தோடு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள்ளனர்.
தந்தை பெரியாரின் கொள்கை வாரிசுன்னு நான் தொடர்ந்து கூறி வருகிறேன். பெரியாரை உலகம் கொண்டாடுவது தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை.
தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த சொல் சுயமரியாதை. உலகத்துல எந்த அகராதியிலும் இதைவிட சிறந்த சொல் இல்லை என்பார். உலகத்திலேயே உயிரை கொடுத்து பெற வேண்டிய ஒன்று சுயமரியாதைதான் என அழுத்தமாக கூறினார்.
சமூகநீதி கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கான கொள்கையாக அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என்ற பெயரை வைக்க பெரியார் போராடினார், ஆட்சி அதிகாரத்தை அடைந்து அண்ணா அதனை செய்து காட்டினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களுக்கு சொத்துகளில் சம உரிமை உள்ளிட்டவற்றை சட்டமாக்கினார் கலைஞர்.
பெரியார் உலகமயமாகிறார். உலகம் மானுட தந்தையை மதிப்பதாக மாறட்டும்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.