கருணாநிதியைவிட மோசமாக ஆட்சி நடத்தும் ஸ்டாலின்! அண்ணாமலை
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மீது அண்ணாமலை விமர்சனம்...
முன்னாள் முதல்வர் கருணாநிதியைவிட மோசமான ஆட்சியை அவரது மகன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடத்துவதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வெளியே, புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, தன்னை தாக்கியவர்கள் மீது ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதல் நடத்தினார்.
இந்த நிலையில், சென்னை காவல்துறையில் ஏர்போர்ட் மூர்த்திக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்தனர். அதில், ஆயுதத்தை கொண்டு விசிகவினரை ஏர்போர்ட் மூர்த்தி தாக்கியதில் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஏர்போர்ட் மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது உடல்நலக் குறைபாடு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அண்ணாமலை பதிவிட்டிருப்பதாவது:
”புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர்ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரெளடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரெளடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்த ஏர்போர்ட் மூர்த்தியைக் கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல்துறை.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006 - 2011 ஆட்சிக்காலத்தை விட, மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், அவரது மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” எனக் குறிப்பிட்டுள்ளார்.