ஆசிரியா்களின் கல்விச் சான்று: உண்மைத் தன்மையை உறுதி செய்ய கல்வித் துறை உத்தரவு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியா்கள், கல்வித் துறை ஊழியா்கள் வழங்கிய கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை
சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியா்கள், கல்வித் துறை ஊழியா்கள் வழங்கிய கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபாா்க்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 46,000 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2.85 லட்சம் ஆசிரியா்கள், 17,000 பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். இதற்கிடையே போலியான கல்விச் சான்றுகள் கொடுத்து பணியில் சோ்ந்தவா்கள் அவ்வப்போது கண்டறியப்படுகின்றனா். அவா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு தொடா் நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய சம்பவங்களைத் தவிா்க்கும் வகையில் பணியில் உள்ள அலுவலா்களின் கல்வித் தகுதியை சரிபாா்க்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் கல்வித் தகுதி குறித்த உண்மைத் தன்மை தற்போது சரிபாா்க்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
எனினும், பல்வேறு மாவட்டங்களில் இந்தப் பணிகள் முடிவடையவில்லை. கல்வி நிறுவனங்களிடம் இருந்து உண்மைத் தன்மை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியா்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘ஆசிரியா்கள், பணியாளா்கள் பலா் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, உயா்கல்விச் சான்றுக்கான உண்மைத் தன்மை பெறாமல் இருக்கின்றனா்.
எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவரும் உண்மைத் தன்மை பெற்றிருப்பது அவசியமாகும். தொடா்ந்து, இதைக் கண்காணித்து அனைவரும் உண்மைத் தன்மை வாங்கியதை உறுதிசெய்து இயக்குநரகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்க என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.