காவிரி ஆற்றல் நீர்வரத்து விநாடிக்கு 12,000 கன அடியாகச் சரிந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வரும் உபநீரின் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலுமாக குறைந்தது. இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த சில நாள்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 16,000 கன அடியாக இருந்த நிலையில் புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 12,000 கன அடியாக சரிந்தது.
நீர்வரத்து சரிவின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி சினி அருவி ஐந்தருவி ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து குறைந்தது. தொடர்ந்து அருவிகளில் நீர்வரத்து சரிந்து வரும் நிலையில் 10 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார்.
தடை நீக்கம் காரணமாக பிரதான அருவி செல்லும் நுழைவு வாயில் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டனர். இருப்பினும் ஒகேனக்கல் பிரதான அருவியில் சொற்ப அளவிலான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளைத் தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.