ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4,000 கன அடியாக அதிகரிப்பு!
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளவானது வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 4,000 கனஅடியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வருவது குறித்து...
பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் வறண்டும், ஆற்றில் ஆங்காங்கே நீர் குட்டைகள் தோன்றி பாறை திட்டுக்களாக காணப்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 300 கன அடி வரை சரிந்தது.
இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாகவும், 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.