வாழப்பாடி: வாழப்பாடி அருகே புதன்கிழமை நள்ளிரவு ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பலியானார்.
மேலும், பேருந்தில் பயணித்த 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உதகையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அருகே புதன்கிழமை நள்ளிரவு சென்றுகொண்டிருந்தது.
அப்போது மேம்பாலம் அருகே திடீரென கார் குறுக்கே வந்த நிலையில், தென்காசியைச் சேர்ந்த ஓட்டுநர் ஜான்ராஜ் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். இதில் நிலைதடுமாறிய ஆம்னி பேருந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில், சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் (59), கோபிசெட்டிபாளையம் அடுத்த குள்ளம்பாளையம் ஜோதிமணி (52), உதகை கடநாடு ராதாகிருஷ்ணன் (61), பேருந்து ஓட்டுநர் ஜான்ராஜ் (40) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகம் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
மேலும், படுகாயங்களுடன் ஓட்டுநர் ஜான்ராஜ் உள்ளிட்ட 5 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர்கள் வெங்கடாஜலம், மயில்சாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.