முகப்பு
தமிழ்நாடு

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது: வழக்குரைஞர் பாலு

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ளார்.

Updated On : 15 செப்டம்பர், 2025 at 8:36 AM
அன்புமணி
பகிர்:

பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்று அன்புமணி வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி, கட்சி நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.

ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து ஆக. 31-க்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் பதிலளிக்காததால் 10 நாள்கள் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டது.

அன்புமணி பதிலளிக்காததால், அவரைக் கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கினார்.

இந்த நிலையில், பாமக தலைவராக அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அன்புமணி தரப்பு வழக்குரைஞர் பாலு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் பாமகவில் இருந்த குழப்பங்கள் தீர்ந்துவிட்டன.

வரும் 2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பாமக தலைவராக, அன்புமணியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தி.நகரில் உள்ள பாமக அலுவலகத்தை, பாமகவின் தலைமை அலுவலகமாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பாமகவுக்கு மாம்பழம் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள்தான் பாமகவின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்த முடியும்.

ராமதாஸ் அவர்கள்தான் நிறுவனர். அவர் வழியில் அன்புமணி பயணித்து வருகிறார்” என்றார்.

summary

Anbumani's lawyer Balu has stated that the Election Commission has recognized Anbumani as the PMK leader.

முழு கட்டுரையைப் படிக்க →