தமிழகம் முழுவதும் 33 கிலோவோல்ட் மின்சாரம் கையாளும் திறன் கொண்ட 70 துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
தமிழகம் முழுவதும் சீரான மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக துணை மின் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, 33 கிலோவோல்ட் மின்சாரம் கையாளும் திறன் கொண்ட 133 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க மின் வாரியம் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல்கட்டமாக 70 துணை மின்நிலையங்கள் அமைப்பதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது: துணை மின் நிலையங்கள் அமையவுள்ள சூழல், இட அமைப்புக்கு ஏற்ப 133 புதிய துணை மின் நிலையங்களும் ‘இன்டோா்’ மற்றும் ‘அவுட்டோா்’ என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு அவுட்டோா் துணை மின் நிலையம் அமைக்க சுமாா் ரூ.7 கோடியும், இன்டோா் துணை மின் நிலையம் அமைக்க ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதற்கான ஒப்பந்தத்தை மின் வாரியம் கோரியுள்ளது. ஒப்பந்தப்புள்ளியில் நிறுவனம் தோ்வு செய்யப்படும்பட்சத்தில் அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து மீதமுள்ள 63 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கோரப்படும் என்றனா்.