செப். 25ல் சென்னையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழா!
கல்வியில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த விழா அறிவிப்பு பற்றி...
தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்த 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கொண்டாட்ட விழா வருகிற செப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்துள்ளார் .
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனைகள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், விளையாட்டு சாதனையாளர்கள் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த திட்டத்தில் பங்கேற்று பயன்பெற்றவர்கள் தங்களது அனுபவத்தை விழாவில் பகிர்வார்கள்.
இதில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். வருகிற செப். 25 ஆம் தேதி மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழா நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு 2.57 லட்சம் மாணவ, மாணவிகள் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் பயன்பெற உள்ளார்கள். கொண்டாட்ட நிகழ்வுடன் இதன் தொடக்க விழாவும் நடைபெற உள்ளது.
நான் முதல்வன் திட்டத்தில் 14 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். 41 லட்சம் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் 20.59 லட்சம் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர். தமிழ் புதல்வன் திட்டத்தால் 3.92 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.