முகப்பு
தமிழ்நாடு

பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையால் எடப்பாடி பழனிசாமிக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் பேச்சு...

Updated On : 1 ஏப்ரல், 2026 at 1:47 PM
பிரசாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் - யூடியூப் / M.K. Stalin
பகிர்:

திமுக தேர்தல் அறிக்கையால் எடப்பாடி பழனிசாமிக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 1) தெரிவித்தார்.

தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டும் என்றால் மீண்டும் திமுக ஆட்சியே அமைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 1) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

''கரூருக்கு மட்டும் ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு திட்டங்களை செய்துள்ளோம்.

இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்திய தெம்போடு உங்களிடம் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

மகளிருக்கு இலவச விடியல் பயணம், உரிமைத் தொகை திட்டங்களை அறிவித்தேன். அதனை செய்தேன். நான் கலைஞரின் மகன். கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவும் மாட்டேன். மறுக்கவும் மாட்டேன்.

10 ஆண்டுகால ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு துரோகம் செய்தது அதிமுக. அவர்களின் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றியுள்ளது.

நம் தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் குறித்துதான் தமிழ்நாடே பேசிக்கொண்டு இருக்கிறது. இல்லத்தரசி திட்டத்தில் ரூ.8,000 கூப்பன் மூலம் பிடித்த பொருள்களை பிடித்த கடையில் பெண்கள் வாங்கிக்கொள்ளலாம்.

நம் தேர்தல் அறிக்கை எடப்பாடி பழனிசாமியின் தூக்கத்தை கெடுத்துள்ளது. என்னோடு பக்கபலமாக மக்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி தொடரும்.

மக்கள் நிம்மதியாக இருப்பதைப்பார்த்து அதிமுக, பாஜகதான் பதற்றத்தில் உள்ளது.

வாஜ்பாய் அரசின் கடிவாளம் கருணாநிதி கையில் இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடுமி அமித் ஷாவின் கையில் உள்ளது. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தோமே தவிர, எடப்பாடி பழனிசாமி போன்று அடகு வைக்கவில்லை.

ஓ.பன்னீர் செல்வம் முதல் சசிகலா வரை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. திமுகவில் இருந்து பிரிந்து உருவானதுதான் அதிமுக. தற்போது அக்கட்சியில் இருந்து தாய் கட்சிக்கே திரும்புகின்றனர்.

துரோகத்துக்கு துரோகமே துணை என்பதைப்போல, அதிமுகவுக்கு பாஜக துணையாக உள்ளது. தடம் மாறி கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமியின் துரோகங்களை எண்ணிப்பாருங்கள்.

தமிழ்நாட்டில் நேரடியாக மோத வலிமை இல்லாததால், அதிமுகவை பயன்படுத்திக்கொள்கிறது பாஜக. மத்தியில் பாஜக அரசு அமைந்ததில் இருந்து தமிழ்நாட்டிற்கு எந்தவொரு நன்மையும் நடந்தது இல்லை.

மதுரை எய்ம்ஸ், மெட்ரோ திட்டத்திற்கு நிதி, குடிநீர்த் திட்டத்திற்கு நிதி என எதையும் பாஜக தரவில்லை. ஹிந்தி திணிப்பை எதிர்த்ததால், தமிழ்நாட்டிற்கு நிதி தர பாஜக மறுத்துள்ளது.

தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் ஒன்றைக் கூட பாஜக நிறைவேற்றவில்லை.

தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், வளர்ச்சிப் பாதையில் நடைபோட வேண்டும் என்றால் மீண்டும் திமுக ஆட்சியே அமைய வேண்டும்'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.

summary

TN Election 2026 Palaniswami Anxious Over DMK Election Manifesto: M.K. Stalin Campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.