3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மூன்றே மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தது குறித்து...
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் மூன்றே மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் இன்று (ஏப். 1) தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததால், தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், போதைப் பொருள்களை கட்டுப்படுத்தியிருந்தால், அதனால் ஏற்படும் குற்றங்கள் குறைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''இந்த மண் வீரம் நிறைந்தது, தனி வரலாறு இதற்கு உண்டு. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைத்ததும், ஜல்லிக்கட்டு ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்யப்படும். ஜல்லிக்கட்டு நடத்த தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு காப்பீடு வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்கப்படும்.
தோல்வி பயத்தால் காங்கிரஸ் காலில் விழுந்து திமுக கூட்டணி வைத்துள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 18,000 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் கதறல் அப்பா ஸ்டாலினுக்கு எட்டவில்லையா?
பழனிசாமி கைகளில் ரத்தக்கறை பதிந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் பேசுகிறார். யாருடைய கை ரத்தக் கறை பதிந்த கை?
எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் அவதூறு பேசுகிறார்.
போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்ததால், தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
போதைப் பொருள்களை கட்டுப்படுத்தியிருந்தால், அதைப் பயன்படுத்திவிட்டு ஏற்படும் குற்றங்கள் குறைந்திருக்கும். போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதை உதயநிதி விமர்சிக்கிறார். அப்படியென்றால், பாஜகவுடன் கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா? பதவிக்கு ஏற்ப பேசிப் பழக வேண்டும்'' என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.