ஜனநாயகன் வெளியிடாமல் தடுக்கப்பட்டது ஏன்? பாடல் பாடி பிசாரம் செய்த விஜய்!
ஜனநாயகன் வெளியிடாமல் தடுக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து விஜய் பிரசாரத்தில் பேசினார்.
ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் தடுத்தது குறித்து திருச்சி பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தவெக தலைவா் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். சென்னை பெரம்பூா் தொகுதியில் கடந்த திங்கள்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்த விஜய், திருச்சி கிழக்குத் தொகுதியில் அவா் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே வந்த விஜய், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய விஜய், கரூர் நிகழ்ச்சி, சூழ்ச்சின்னு பல பேர் சொல்றது மாதிரி, நமது கடைசிப் படமான ஜனநாயகன் அதான் நமது மனசுக்கு நெருக்கமான உங்களுடன் இருக்கும் பூர்வஜென்ம பந்தத்தை, அந்தப் படம், எங்கே இன்னமும் நெருக்கமாக மாற்றிவிடுமோ என்ற பயத்தில் எங்க, அது இந்த தேர்தலில் அவர்களுக்கு எதிரான ஆயுதமா மாறிடுமோன்னு ஒரு கூட்டு சூழ்ச்சி, அதனுடன் இன்னமும் பல பல சூழ்ச்சிகள் நடக்கின்றன. எனவே, உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும் சேர்த்துத்தான் நீதி வேண்டும் என்று கூறினார்.
அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு, உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன், நான்கு முனைப்போட்டியோ எத்தனை முனைப்போட்டியோ, இங்கு இருமுனைப்போட்டிதான், ஒன்று தவெக, இன்னொன்று திமுக. எனவே எனக்கு ஒரே ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்று விஜய் கூறினார்.
தொடர்ந்து பேசிய விஜய்,
நான் தன்னந்தனி ஆளு, நீ ஏளனமா பாரு
கொஞ்சம் நவுந்தேனா.. இங்க எட்டு கோடிப்பேரு,
மிரளப்போது ஸ்டேட்டு, இங்கு விசில் சப்தம் கேட்டு
நல்லவங்க வாழ, நீ விசிலுக்கு அடி ஓட்டு,
கடைசி நம்பிக்கை மக்களைத் தேடி வருது
அதை இறுக்கிப்பிடிச்சி ஒரு வரலாறு எழுது
உங்க விஜய் நான் வரேன் என்று கூறி பிரசாரத்தை நிறைவு செய்தார்.
கடுமையான வெய்யில் வெளுத்து வாங்கியதால், குறைந்த நேரத்தில் தன்னுடைய பேச்சை நிறைவு செய்துகொள்வதாகக் கூறியே உரையைத் தொடங்கினார் விஜய்.