புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, இளைஞர்களுக்கு ரூ. 2,000, மருத்துவக் காப்பீடு ரூ. 20 லட்சம்! - ராகுல்
புதுவை தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குறுதிகள்...
புதுவையில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.
புதுவையில் காங்கிரஸ், திமுக கட்சிகளிடையே நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டு, மொத்தமுள்ள 30 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸுக்கு 16-ம், திமுகவுக்கு 14-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
புதுவை யூனியன் பிரதேசத்தில் வரும் 9 ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் ஏப். 7 ஆம் தேதியுடன் பிரசாரம் முடிவடைகிறது.
Advertisement
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு முதல்முறையாக இன்று புதுவை வந்த நிலையில் லாஸ்பேட்டை பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.
"இந்த மாநிலத்தை ஆளுகிறவர்கள் மண்ணின் மைந்தர்கள் இல்லை. இங்கு நடக்கின்ற அரசு மக்களின் எண்ணங்களை உள்வாங்கும் அரசு இல்லை. வெளியில் இருந்து வந்தவர்களின் எண்ணங்களை திணிக்கின்ற அரசு.
பாஜக அவர்களது சித்தாந்தங்களை திணிக்கும் அரசாக உள்ளது. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக இல்லை ஆளுநரை வைத்து நாடகம் நடத்தும் அரசாக உள்ளது. நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
பாஜக அரசு தொடர்ந்தால் மின்துறை உள்ளிட்ட அனைத்தும் அதானி குழுமத்திடம் விற்றுவிடும். இங்கு ஊழல் மட்டுமல்ல, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் போலி மருந்து விவகாரம் உள்ளது. போலி மருந்துகள் அதிகம் தயாரிக்கப்பட்டு ஊழல், லஞ்சம் அதிகரித்துள்ளது.
எதைத் தொட்டாலும் கமிஷன் அரசாக உள்ளது. இங்குள்ள வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள் அருகில் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. டெண்டர்களிலும் ஊழல் இருக்கிறது. காரைக்கால் துறைமுகமும் மின்வாரியமும் அதானியிடம் விற்கப்பட்டுள்ளது
எங்கே பார்த்தாலும் ஊழல், லஞ்சம் உள்ளது. அவர்கள் எல்லாருக்கும் அது தெரியும். ஆனால் அதைபற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் கீழ்க்காணும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
1. வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்.
2. ஆட்சிக்கு வந்ததும் அரசு மற்றும் தனியார் துறையில் 30,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.
3. மகளிருக்கு இலவச பேருந்து சேவை அமல்படுத்தப்படும்.
4. அரசு வேலைக்கான வயது வரம்பு 40 ஆக உயர்த்தப்படும்.
5. புதுவையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் வருடத்திற்கு ரூ. 20 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்க உறுதி செய்யப்படும்.
6. புற்றுநோய், சிகிச்சை உள்ளிட்ட எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் ரூ. 20 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.
7. காங்கிரஸ் ஆட்சி பதவியேற்ற 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.
மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக எங்களுடைய இருக்கும். மண்ணின் மைந்தர்கள் ஆட்சி செய்யும் அரசாக இருக்கும். எங்களது கூட்டணி கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
புதுவைக்கு ஒவ்வொரு முறை வரும்போதும் நீங்கள் என் மீது அன்பு காட்டுவதைப் பார்த்து நான் நெகிழ்ந்து போகிறேன். புதுவைக்கும் என்னுடைய குடும்பத்திற்குமான உறவு ஆழமானது, உணர்வுப்பூர்வமானது. இது அரசியல்ரீதியான உறவு அல்ல, அதற்கும் அப்பாற்பட்டது" என்று பேசினார்.